Wednesday 28 December 2011

என் ஆதவனே

என் ஆதவனே உன் அழகு முகம் கண்டு மலரும் தாமரை நான்

நீ செல்லுமிடமெல்லாம் தலை திருப்பும் சூர்யகாந்தி நான்

என் சந்திரனே உன்னைப் பிரியாதிருக்கும் நீல வானம் நான்

உன் வரவு கண்டு மலரும் அல்லி மலர் நான்

நீ கடலானால் அலையாக நான்

கண்ணானால் இமையாக நான்

சுவாசிக்க மறந்தாலும் உன்னை நேசிக்க மறக்கவில்லை நான்

உன்னிடம் யாசிக்கிறேன் பிரியாத வரம் தருவாயா

தந்தைக்கு

பெண்ணாய் நானும் பிறந்ததை அறிந்து

பெருமை மிகவும் கொண்டு

மண்ணில் தவழ்ந்து வரும்போது

மடியில் வைத்து மகிழ்ந்து

துள்ளித் திரிந்த காலத்தில்

பள்ளிக்கூடம் சேர்த்து

கல்லூரியில் நான் கால் வைக்க

கண்ணும் கருத்துமாய் கவனித்து

ஒவ்வொரு படியாய் முன்னேற

ஒத்துழைப்பு மிக நல்கி

நல்ல வேலை கிடைத்தவுடன்

நாளும்பொழுதும் எதிர்நோக்கி

கண்ணுக்கினிய கணவனையும்

கடமை மாறாமல் தேர்ந்து கொடுத்து

முதிர்ந்த இந்த வயதினிலும்

மூப்படையா இளமையுடன்

என் நலமே தினமும் நினைத்து

தன்னலம் துறந்த தந்தைக்கு

கைம்மாறு செய்து கடனைத் தீர்க்க

கடவுளிடம் நான் வரம் கேட்பேன்

அடுத்து வரும் பிறவிகளிலும்

அவருக்கே நான் மகளாக.

(பெண் குழந்தைகளைக் கண்ணெனப் போற்றும் தந்தைகளுக்கு சமர்ப்பணம்)

என்னவனே

வான்மதியை வடித்து செய்த வட்ட வதனமும்

வதனத்தில் நிறைந்திருக்கும் வசீகரமும்

கயல்மீன்கள் நாணும் கருவண்டுக் கண்களும்

கண்களில் குடியிருக்கும் கனிவுப் பார்வையும்

முல்லைநிகர் பற்களில் முறுவலின் ஆட்சியையும்

முறுவலில் முகிழ்ந்திருக்கும் அன்பின் மாட்சியும்

தாய்போல் அரவணைத்துத் தாலாட்டும் கைகளும்

தந்தைபோல் வழிநடத்தும் தங்கநிறப் பாதமுமாய்

கண்ணுக்குள் ஒளியாகக் கலந்துவிட்ட உன் உருவம்-நான்

மண்ணுக்குள் மறைந்தாலும் மறவாது மன்னவனே.

என்றென்றும் உன் மடியில்

மார்கழிப் பனியின் இரவில்
மங்கிய ஒளியின் நிலவில்

மயக்கும் மலர் வாசத்தில்
மனச்சோர்வு மிகப்பெற்று

தெருவோர விளக்கொளியில்
வருகிறாயா நீ என்று

பார்த்தவிழி பார்த்தபடி
பாவை நான் காத்திருக்க

நாழிகையும் கடந்து நடுநிசியானது
நான் தேடும் நீயோ வரவேயில்லை.

காலையில் நடந்த கருத்து வேறுபாடு
கவனத்தில் வந்து கண்ணீர் பெருக

தவறு மட்டும் என் மேல்தான்
தனிப்பெரும் தலைவனே

விரைவினில் வந்துவிடு
விழிநீர் துடைத்துவிடு

உன்னைக் காணாமல் உருகிக் கரையும்
என்னிதையம் உடைந்து துகள்களானது

எண்ணியபடி ஏறிட்டேன் தெருவை
ஏறுபோல் நடந்து எதிரில் நீ வர

புள்ளியாய் தொலைவில் தெரியும் உன்னை
புன்னகையோடு மகிழ்ந்து நோக்கினேன் நானும்

ஆயிரம் கோடி ஆடவர் நடுவிலும்
அறிந்திட முடியும் உன்னை என்னால்

வீட்டில் நீ நுழைய விம்மும் மனதுடன்
வாட்டிய கவலையின் வருத்தம் தீர

மனம் உருகி நின்று மன்றாடினேன் நான்
மறுமொழி சொல்லாமல் கடந்து சென்றாய் நீ

உணவும் உறக்கமும் வேண்டாம் எனக்கு
உட்கார்ந்தேன் ஒரு ஓரமாக

உள்ளே சென்ற நீ உடனே வந்து
கள்ளமில்லாமல் கண்ணீர் துடைத்து

உண்ணும் உணவை கிண்ணத்திலிட்டு
உளம் சோர்ந்த எனக்கு ஊட்டியும் விட்டாய்

இது போதும் இனியவனே
இந்த அன்பு ஒன்றுதான்

எனைக் கட்டிப் போட்டது
என்றும் உன் மடியில்

அழகு

கவிதைபாடும் கருங்குயில் குரலில்

கானகத்தில் வீழும் காட்டருவியின் ஒலியில்

கலகலத்துச் சிரிக்கும் மழலையில் சிரிப்பில்

காற்றில் மிதந்து வரும் வேய்குழல் இசையில்

கட்டவிழ்ந்து ஓடும் கன்றின் துள்ளலில்

காவிரியாற்றின் கரையோர மணலில்

கருவண்டாடும் கனகமலர்ச் சோலையில்-நான்

காண்பது எல்லாம் கவின்மிகு அழகு-ஆனால் என்

கன்னித் தமிழ்மொழியில் உள்ளதோ கடவுளின் பேரழகு.

தை மகள்

கதிரவன் கரங்கள் நீட்டிக்

கமலம் தன் இதழ் விரிக்க

காலையின் பனிப்போர்வையில்

கன்னியர் பொங்கல் வைக்க

கரும்பின் நல் சுவையினாலே

கன்று தாய்ப் பால் மறக்க

உழவர் ஏர் பூட்டிச் சென்று

உவப்புடன் கழனி சேர

நல்லவை நடக்குமென்ற

நாயகன் அருளினாலே

தை மகள் தேரில் ஏறி

தமிழகம் பவனி வந்தாள்

கவசம்

பனி ரோஜா மொட்டொன்று

பவள இதழ் விரித்தின்று

கடிதாக மலர்ந்தது

காற்றினிலே அசைந்தது.

அடுத்த வீட்டுத் தோட்டத்தில்

அலர்ந்திருந்த மல்லிக்கு

அதன் அழகில் அசூயை

அதனால் கூறும் அறிவுரை

பேரழகுத் தங்கையே

பிரமித்தேன் உன் அழகில் ஆனால்

இந்தக் கூர் முட்கள்

வந்து குறைத்தன உன்னழகை

என்று கூறியது

ஏளனமாய் நகைத்தது

மல்லியின் பேச்சை நம்பி

முட்களைக் கடிந்தது ரோஜா

கொல்லவே வந்தீர் நீங்கள்

கொடும் கூர் முட்களே

உம்மால் எனக்குச் சிறுமை

ஒழிந்துபோம் என்னை விட்டு

பழியான இந்த வார்த்தைக்கேட்டு

பதைபதைத்து அதனால்

மனமுடைந்த முட்கள்

மண்ணில் உதிர்ந்தன

அடுத்த நிமிடம் ரோஜாவை

ஆடு மேய்ந்து சென்றது

கவசமாக முட்களைக்

கருதாமல் இழந்த ரோஜா

கதறி இனி என்ன பலன்